Sunday, October 20, 2019

வந்தார்கள் வென்றார்கள்

ஜுனியர் விகடனில் வெளியான கார்ட்டூனிஸ்ட் மதன் எழுதிய வந்தார்கள் வென்றார்கள் என்ற தொடர் மிகப்பெரிய வெற்றி பெற்று புத்தகமாக வெளிவந்திருந்தது. அதை நான் தொடராக வெளிவந்த காலத்தில் படிக்க முடியவில்லை. ஒருமுறை புத்தகக் கடையில் பல புத்தகங்களைப் புரட்டிப் பார்த்துக் கொண்டே வந்தேன். வந்தார்கள் வென்றார்கள் புத்தகம் கண்ணில் பட்டது. அதைக் கையிலெடுத்துப் பிரித்தேன். முதல் அத்தியாயம் தைமூர். அதில் அச்சேறியிருந்த தைமூர் செங்கிஸ்கான் மற்றும் அலெக்சாண்டரின் படங்கள் ஆர்வத்தைத் தூண்ட மேலோட்டமாக முதல் அத்தியாயத்தை படித்தேன். எகிறிவிட்டது இதயம். எத்தனை கொடூரங்கள் அப்பொழுதே அந்த புத்தகத்தை வாங்கி வந்துவிட்டேன். முகமது கோரியில் ஆரம்பித்து நாதிர்ஷா வரை கொடூரங்களும் போர்களும் இடையிடையே காதலும் கலந்த வரலாற்று நிகழ்வுகள். தந்தை மகனைக் கொல்வதும் மகன் தகப்பனைக் கொடுமைப்படுத்துவதும் அண்ணன் தம்பிகளையும் அவர்கள் குடும்பத்தையே அடியோடு அழிப்பதும் தம்பி அண்ணன்களை வேரறுப்பதும். அப்ப்ப்ப்ப.... அரச போகம் இத்தனை அக்கிரமங்களுக்கு வழிவகுக்குமா? இதையெல்லாம் படிக்கும் போது நெஞ்சில் நிலவிடும் நிம்மதி என்ன தெரியுமா? தற்போது நாம் வாழும் காலம் இந்த வாழ்க்கை எவ்வளவு நிம்மதியானது. ஒரு கார்ட்டூனிஸ்ட்டால் இவ்வளவு அழகான நடையில் எழுத முடியுமா? முடியும் என நிரூபித்துள்ளார் மதன். கையில் எடுத்துப் பிடித்ததிலிருந்து புத்தகத்தைக் கீழே வைக்கக்கூடத் தோணாது படித்துக் கொண்டே இருக்கத் தோணும் எழுத்துநடை. பொதுவாக வரலாற்றுப் பதிவுகளை கொஞ்ச நேரம் மட்டுமே படிக்க முடியும். சற்று நேரத்திலேயே மனச் சோர்வு ஏற்பட்டுவிடும். ஆனால் வந்தார்கள் வென்றார்கள் படிக்கப் படிக்க ஒவ்வொரு ஆட்சிக்காலமும் நம்முன்னே காட்டும் பிரமாண்டம்.நம்மைப் பிரமிக்க வைக்கிறது.இதில் தென்னாட்டு மன்னர்கள் பற்றிய இப்படிப்பட்ட விஸ்தாரமான தகவல்கள் இல்லாமல் போய்விட்டதா அல்லது அவற்றைத் தொகுத்து வழங்க மதனைப் போன்ற எழுத்தாளர்கள் முயற்சிக்கவில்லையா தெரியவில்லை. யாராவது ஒருவர் தென்னாட்டு மன்னர்கள் பற்றியும் இப்படி விரிவாக எடுத்து எழுதுங்களேன். நன்றி மீண்டும் சந்திப்போம்.

Thursday, August 30, 2012

முதல் மரியாதை


பத்தாவது முறையாக முதல் மரியாதை திரைப்படத்தைப் பார்த்தேன். அற்புதமான ஒரு காதல் காவியம்.. அன்புக்கு ஏங்குகின்ற ஒரு ஜீவனின் துடிப்பை துல்லியமாக காட்டியிருக்கும் படம்.
  ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அன்பிற்கான ஏக்கம், காதலுக்கான தவிப்பு, ஒரு தாய்மையின் அணைப்புக்கும் மயிர் கோதும் விரல்களுக்குமான தேடல் இருந்துகொண்டுதானிருக்கிறது. ஒரு சிலருக்கு அன்பும் அரவணைப்பும் இயல்பாகவே கிடைத்துவிடுகிறது. பலருக்கு வாழ்க்கை முழுக்கக் கிடைக்காமலே போய்விடுகிறது.
  தோப்பின் நடுவே சிம்னி விளக்கெரியும் ஒற்றைக் குடிசைக்கு வெளியே நிலவொளியில் மனைவியின் மடியில் கணவன் தலைவைத்துப் படுத்திருக்க அவனது வயிற்றின் மேல் சாய்ந்து குழந்தை தூங்க நடுநிசிவரை கிண்டலும் கேலியுமாய் பேசி மகிழும் குடும்பத்தையும் பார்த்திருக்கிறேன். பணத்தின் பின்னால் ஓடிவிட்டு நேரங்கெட்ட நேரத்தில் வந்து தானே சோற்றைஅள்ளிப் போட்டுத் தின்றுவிட்டு தனியறையில் படுத்துறங்கி பொழுது புலருமுன் குடும்பத்தின் முகத்திலேயே விழிக்காமல் மீண்டும் பணத்தின் பின் ஓடும் மனிதர்களையும் பார்த்திருக்கிறேன்.
 இங்கே பணம் மிகுந்திருக்கிறது. அங்கே சந்தோசம் மிகுந்திருக்கிறது. பணத்தைக் கொடுத்து சந்தோசத்தை வாங்கமுடியும் என்ற எண்ணம் எல்லாக்காலங்களிலும் இருந்திருக்கிறது. இப்போது அதிகமாக வளர்ந்திருக்கிறது. அது என்றுமே சாத்தியமில்லை என்பதுதான் உண்மை. அந்தப் பணத்தைக் கொண்டு அன்பு காட்டுவது போல் நடிப்பவர்களை வேண்டுமானால் விலைக்கு வாங்கலாம். அன்பை வாங்கமுடியாது. உங்களைக் கண்டவுடன் சந்தோசப் படுவது போல் நடிப்பவர்களை வாங்கலாம். சந்தோசத்தை வாங்கமுடியாது.
 முதல்மரியாதை படத்தில் நடிப்புக்கான களம்தான் என்றாலும் அங்கே யாரும் நடிக்கவில்லை. நம்முள் ஒருவராக வாழ்ந்திருக்கிறார்கள். மற்ற படங்களிலெல்லாம் காதல் என்ற பெயரில் காமம் மட்டுமே சொல்லப்படுகிறது. அழகிய பெண்ணைப் பார்த்து அழகிய ஆண் விரும்புகிறான் காதலிக்கவில்லை. ஆனால் இது காதலைச் சொன்ன படம். இப்போது இதுமாதிரிப் படைப்புகளை பாரதிராஜாவிடமே எதிர் பார்க்கமுடியாது என்பதுதான் நிதர்சனம். மீண்டும் சந்திப்போம்.
 

Wednesday, June 6, 2012

இறைவன் இருக்கின்றானா?


   எங்கள் ஊருக்கு பக்கத்து ஊரில் ஒரு பாழடைந்த பெருமாள்கோவில் ஒன்று இருந்தது. கோவில்தான் பழையது ஆனால் பூஜைகள் காலக்கிரமப்படி நடந்து கொண்டுதானிருந்தது. அந்தப் பூஜைக்கு எங்கள் வீட்டிலிருந்து தேவையான பொருளும் பணமும் கொடுத்து வருவது வழக்கம்.
  ஒருநாள் பூசாரி வீட்டிற்கு வந்திருந்தார். அவர் சொன்னார்"கவுண்டரே கோவிலில் அமுது அறை ஒன்றுகட்டிக் கொடுங்கள். பொங்கல் வைப்பதற்கு சிரமமாயிருக்கிறது" என்றார். நானும் சரி முக்கால்வாசிச் செலவை நான் செய்துகொள்கிறேன். கால்பங்கு செலவை அந்த ஊர்க்காரர்கள்தான் செய்யவேண்டும். அதனால் ஊர்க்கூட்டத்தைக் கூட்டுங்கள் என்றேன். கோவில் வளாகத்திலேயே கூடினோம். கூட்டத்தில் முன்னாள் கிராம நிர்வாகி ஒருவர் கலந்து கொண்டார். அவர்" கோவில் பாழடைந்து கிடக்கும்போது அமுதமடம் கட்டுவது வீண்வேலை முதலில் கோவில் கட்டும் வழியைப் பாருங்கள்."என்றார். சரி கோவிலை இடித்துக் கட்டுவது என்று முடிவெடுத்தோம்.. பிறகு ஒரு கோவில் கட்டுமானத்தைப் பற்றித் தெரிந்த அறிஞர் ஒருவரை அழைத்துவந்து காட்டினோம். அவர் இந்த இடத்தில் ஆவுடையார் (சிவலிங்கத்தின் கீழ்ப்பகுதி) மட்டும் இருக்கிறது லிங்கத்தைக் காண்வில்லை சிவன் கோவிலாக இருந்து பெருமாள்கோவிலாக மாற்றப்பட்டிருக்கிறது. என்று சொன்னார். நான் சரி சிவன் கோவிலாகவே கட்டிவிடலாம் என்று சொன்னேன். ஊர்மக்கள் தயங்கினார்கள். பெருமாள் கோவில் மட்டும்தான் கட்டமுடியும் சிவன் கோவில் கட்டுவதானால் அதிகம் செலவாகும் எங்களால் அவ்வளவு தொகை வசூல் செய்ய்முடியாது. என்று சொல்லிவிட்டார்கள்.
  நான் அவர்களிடம் பேசி சிவன் கோவில் கட்டுவதற்கு மற்ற ஊர்க்காரர்களிடம் வசூல் செய்ய்துவிடலாம் என்ற நம்பிக்கையூட்டி சிவன் கோவிலாகவே கட்டிவிடலாம். நானும் ஒரு பெரிய தொகைக் கொடுக்கிறேன் என்று சொல்லி சம்மதிக்கச் செய்தேன். மேலும் சில பெருந்தனக்காரர்கள் உதவியுடன் சிவன் அம்பாள் பெருமாள் ஆக மூன்று சன்னிதிகளை அமைத்து கட்டுமானங்களை ஆரம்பித்தோம்.
     இதில் என்ன பிரச்சனை என்கிறீர்களா? பிரச்சனை கோவில் கட்டுவதில் இல்லை. எனக்குத்தான். அதுவரை அமைதியாக சென்று கொண்டிருந்த என் வாழ்வில் கோவில் வேலை ஆரம்பித்து மூன்று வாரங்களில் ஒரு லாரி மண்ணைக் கொண்டுவந்து என் தலைமீது கொட்டியது போல போலீஸ் ஸ்டேசன் கோர்ட் சிவில்வழக்கு அவமானம் என அனைத்தும் ஒன்றாய் வந்து சேர்ந்தது. சுமுகமாக இரண்டொரு வார்த்தைகளில் தீரவேண்டிய பிரச்சனைகள்கூட பூதாகரமாய் வெடித்தது. அதற்காக செலவளித்த பணத்தை வைத்துக் கோவிலைக் கட்டிமுடித்திருக்கலாம்.
     இதுதான் ஆண்டவன் கிருபையா? தனக்காக கோவில் கட்டுபவனைக் கூட நிம்மதியாகக் கட்டவிடாத அந்த ஆண்டவனை வாழ்க்கையில் நிம்மதியைக் கொடு என்று வேண்டுவது முட்டாள்தனமாகத் தெரியவில்லையா? ஆனந்தவிகடனில் மதன் எழுதிய வந்தார்கள் வென்றார்கள் என்ற நூலைப் படிக்கும் போது நினைப்பதுண்டு எல்லாம் வல்ல சோமநாதராலேயே தன்னுடைய கோவிலையும் தனது பக்தர்களையும் காப்பாற்ற முடியவில்லையா? என்று. மொகலாயர் ஆட்சியில் இடிக்கப்பட்ட கோவில்கள் எத்தனை? கொள்ளையடிக்கப்பட்ட செல்வங்கள் எவ்வளவு? அதே நிலைதானா எனக்கும்?
      என்னுடைய சந்தேகம் ஒன்றுதான். இறைவனைக் கும்பிடுவதா வேண்டாமா? இறைவன் என்று ஒன்று உண்டா இல்லையா? ஆண்டவனை செருப்பால் அடித்தவர்களுக்கு ஆட்சி அதிகாரம் பணம் புகழ். என அனைத்தையும் வாரி வழங்கிய ஆண்டவன் கோவில் கட்டுபவனுக்கு மட்டும் அவமானமும் அபகேடுகளும் பரிசாகக் கொடுப்பதேன்? சிலையைத் திருடுபவன் பஞ்சனையில் களித்திருக்க சிலைவடிப்பவன் தெருப்புழுதியில் கிடப்பதேன்? யாருக்காவது பதில் தெரிந்தால் சொல்லுங்களேன்.  

Friday, January 14, 2011

ஓடினேன்

கருவறை என்னை துரத்தியது
இந்த பூமியை நோக்கி ஓடினேன்
பசி என்னை துரத்தியது
தாயின் மார்பைத தேடி ஓடினேன்
அறிவு தாகம் என்னைத துரத்தியது
கல்வியைத் தேடி ஓடினேன்
காமம் என்னைத் துரத்தியது
ஒரு கன்னியைத தேடி ஓடினேன்
கடமை என்னைத் துரத்தியது
செல்வத்தைத தேடி ஓடினேன்
முதுமை என்னைத் துரத்தியது
ஒரு ஆறுதல் தேடி ஓடினேன்
இனி மரணம் என்னைத் துரத்தும்
எங்கே யாரிடம் ஓடுவேன்

Thursday, December 23, 2010

உணர்வுகள்

அனைவருக்கும் வ்ணக்கம்
எனக்கு ஆசைக்கு ஒரு பெண் ஆளுமைக்கு ஒரு ஆண் என்று இரண்டு குழந்தைகள் இந்தக் கருத்தை சிலர் ஆட்சேபிக்ககூடும் அதென்ன ஆளுமைக்கு ஆண்தானா? பெண்ணால் ஆளுமை செய்ய முடியாதா?என்று!
உண்மையில் ஆளுமை செய்வது பெண்தான். மேலோட்டமாகப் பார்த்தால் ஆண்மகன்தான் அனைத்தையும் செய்வதுபோலத் தெரிந்தாலும் வழி நடத்தும் கடிவாளம் பெண்ணின் கையில்தான்! நான் சொன்னது காலங்காலமாய் சொல்லிவரும் சொல்வழக்கு அவ்வளவுதான்!
எனது மக்கள் சிறுவர்களாக இருந்தபோது நான் மிகுந்த கண்டிப்போடு நடந்து கொண்ட்துண்டு.அடித்தும் விடுவேன் ஏனெனில் என்னை வளர்த்தமுறை அப்படி.அவர்களுக்கு அந்த வயதுக்குரிய குறும்புகளோ ஆட்டபாட்டங்களோ இருந்ததில்லை.எதையும் வேண்டும் என்று அடம்பிடித்ததில்லை இதைப் பற்றி நான் பெருமையாகப் பேசுவதுண்டு. "ஏம் பசங்க குறும்பே பண்ணமாட்டாங்க என்னெப் பார்த்தாலே கப்சிப்புனு அடங்கிருவாங்க" என்று நான் பீற்றிக்கொள்ளுவதுண்டு
என் மகனுக்கு இரண்டரை வயதிருக்கும்போது கீழே விழுந்து கையை ஒடித்துக் கொண்டான் பொள்ளாச்சி சென்று வைத்தியம் செய்து கட்டுப் போட்டுவந்தேன் பதினைந்து நாள் கழித்து அவனை அழைத்துக் கொண்டு பஸ்ஸில் பொள்ளாச்சிக்கு மருத்துவரிடம் கண்பிப்பதற்காக சென்று கொண்டிருந்தேன் என் மடியில் மகன் அமர்ந்துகொண்டு வந்தான் சற்று தூரம் செல்லும்வரை என் முகத்தைப் பார்த்துக் கொண்டே வந்தவன் சட்டென்று என் முகத்தை அருகில் இழுத்து கன்னத்தில் முத்தமிட்டான்
ஒரு நிமிடம் ஆடிப்போய்விட்டேன் அப்பொழுது நான் அடைந்த உணர்வு வார்த்தையால் சொல்ல முடியாது அது நாள்வரையில் மிரட்டுவதும் அடிப்பதும்தான் என்னுடைய அணுகுமுறையாக இருந்ததே தவிர எந்த விதத்திலும் என்னுடைய அன்பையோ அரவணைப்பையோ அவர்களுக்கு நான் அளித்ததில்லை இருந்தும் என் மீது அன்பு செலுத்தும் ஒரு ஜீவன்
பொங்கிவரும் கண்ணீர் பொள்ளாச்சி செல்லும் வரை நிற்கவில்லை அந்தக் கண்ணீருக்கு அர்த்தம் அழுகை என்று சொல்ல முடியாது இனம் புரியாத உணர்வு கண்ணீராய் வடிந்துகொண்டிருந்தது அந்தக்கண்ணீரில் என்னுடைய அகங்காரம் ஆணவம் அனைத்தும் கரைந்துவிட்டிருந்தது நான் கேட்டு அவன் முத்தமிட்டிருந்தால் அது என் உணர்ச்சியை தூண்டியிருக்காது கேட்காமலே கிடைத்த அன்பில் கலங்கிவிட்டேன் அன்றிலிருந்து இன்றுவரை நான் அவர்களை அடித்ததோ திட்டியதோ கிடையாது
எனக்குள்ளே அப்படி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது எது? முத்தமா?அதனால் மட்டும் மாற்றத்தைக் கொண்டுவரமுடியுமா? பையன் முத்தங் கொடுத்தானாம் இவன் மாறிட்டானாம் என்ன கதை விடுறான் பார்? என்று உணர்ச்சியற்ற சிலர் கேலி பேசக்கூடும் மனிதம் என்பதே உணர்ச்சியால் வழிநட்த்தப்படுவதுதானே? இன்பம் துன்பம் ஆசை கோபம் அன்பு வெறுப்பு அழுகை சிரிப்பு பொறாமை இயலாமை என பலவிதமான உணர்ச்சிகள். பலவிதமான மனப்போராட்டங்கள் இவற்றின் வழியில் செல்லும் வாழ்க்கை. இதுதானே மானுடம்?
ஆனால் இன்றோ மேலே சொன்ன அத்த்னை உணர்ச்சிகளையும் விற்றுவிட்டு உறவுகளைக் கொன்றுவிட்டு பணம்பணம் என்று பணத்தை தேடி ஓடிக்கொண்டிருக்கிறான் மனிதன்! ஆறடி மண்ணுக்கு அவ்வளவு பணம் தேவையா?யோசித்துக் கொண்டிருங்கள் பிறகு சந்திப்போம்

Sunday, September 12, 2010

முன் ஜென்மம்

ஒரு மனிதனுக்கு அவ்னுடைய வாழ்வின் முற்பகுதியில் எப்படி வாழ்ந்தானோ அதன் பிரதிபலிப்புதான் பிற்பகுதி வாழ்க்கை அதை விடுத்து முன் ஜென்மம் பின் ஜென்மம் என்பதெல்ல்லாம் கிடையாது என்பது என்னுடைய கருத்து
இளமையில் உடல் திராணியிருந்த காலத்தில் நல்லவனாக, நாலுபேருக்கு உதவுபவனாக இருந்தால் அதன் பலனை பிற்பகுதியில் அனுபவிக்க முடியும் அப்படியில்லாமல் தான்தோன்றித்தனமாக டாஸ்மாக்கில் பகுதிநேரம் பரத்தையர் மடியில் பகுதி நேரம் என்று கழித்துவிட்டு வீட்டுக்கு போனவுடன் மனைவியை அடித்து மகனை மயிரைப் பிடித்து உலுக்கி செய்யாத கூத்தெல்லாம் செய்துவிட்டு மீண்டும் டாஸ்மாக் கடையில் ஐக்கியமாகி விடுவதுமாக இருப்பவனுடைய பிற்பகுதி வாழ்க்கை நரகமாகத்தான் இருக்கும்
சம்பாதிக்க வேண்டிய நேரத்தில் சம்பாதிக்காமல் கைமுதலையும் வாலிபகாலத்தில் தொலைத்துவிட்டு இளமைக் கொழுப்பெல்லாம் கரைந்தபிறகு மனைவி மக்களின் ஆதரவில்லாமல் பொருளாதாரப் பலமுமில்லாமல் கடைசியில் ஒரு வாட்ச்மேன் வேலை கிடைத்தாலாவது பரவாயில்லை என்று அலையும் நேரத்தில் கூட இந்த நிலைமைக்குக் காரணம் நம்முடைய கடந்தகால விளையாட்டுத்தானே என்று நினைக்காமல் இதெல்லாம் முன்ஜென்மத்துப் பாவம் என்று சொன்னால் அது முன்ஜென்மத்துப் பாவம் அல்ல நம் இளமையில் செய்த பாவம்
நம்முடைய பெற்றோரை பாசத்துடன் கணிவோடு கவனித்திருந்தால் மட்டுமே நம் பிள்ளைகள் நம்மைப் பார்க்கும். வயதானவர்களை பெரியவர்களை எப்படி கவனிக்க வேண்டும் எப்படி அவர்களிடம் ப்ண்பாக பணிவோடு நடந்து கொள்ள வேண்டும் என்பது பாலபாடமாக அவர்கள் மனதில் வேரோடியிருக்கும். நம்மையும் நம் பிள்ளைகள் அன்பாக அரவணைத்துச் செல்லும்.
அவ்வாறில்லாமல் மாமியாரும் மருமகளும் மயிர் பிடித்துக் கொள்வதும் அப்பனும் மகனும் அடித்துக் கொள்வதுமாக இருந்தால் கடைசி நாட்களில் ஓரமாய் ஒதுக்குத் திண்ணையில் கிடக்க வேண்டியதுதான் என்ன அந்தக்காலத்தில் ஒதுக்குத்திண்ணை இந்தக்காலத்தில் முதியோரில்லம் அப்படி ஒதுக்குத்திண்ணையில் கிடக்கும்போது நம்முடைய பெற்றோர் படுத்திருந்த இடம் இதுதானே என்று நினைக்காமல் இதெல்லாம் முன் ஜென்மத்து வினை என்று சொன்னால் அது முன் ஜென்மத்து வினையல்ல இளமையில் செய்த வினை
மீண்டும் சந்திப்போம்












Thursday, September 9, 2010

முதல் அனுபவம்

அன்பு உள்ளங்களுக்கு வணக்கம்
முதலில் சுயவிபரம் சொல்லிவிடுகிறேன் நித்தியானந்தம் பியூசி ஆங்கிலம் மண்டையில் ஏறாததால் தொடரவில்லை விவசாயம்தான் தொழில் (பிறகென்ன என்னுடைய படிப்புக்கு கலெக்டர் உத்தியோகமா கிடைக்கும்?) வேறு பெரிதாகச் சொல்லிக்கொள்ள ஒன்றுமில்லை சரி மேட்டருக்கு வருகிறேன்
எனக்கு இருபத்தி நாலு வயதில் திருமணம் அழகான பெண் மனைவியாக வாய்த்தாள் (சும்மாவா! ஏழில் குரு இருக்குதப்பா) ஒரு வருடத்தில் பெண் குழந்தை பிறந்தது குழந்தை பிறந்து மூன்றாவது நாள் எனது தாத்தாவும் நானும் என் தந்தையின் பைக்கை எடுத்துக் கொண்டு ஜோதிடரிடம் சென்றோம் ஜோதிடரின் வீட்டிலோ வறுமை தாண்டவமாடியது ஒரு காலத்தில் நன்றாக வாழ்ந்த குடும்பமாக இருந்திருக்க வேண்டும் ஏனென்றால் அவருடைய இல்லம் தொட்டிக்கட்டு வீடு கோவை மாவட்டத்தில் தொட்டிக்கட்டு வீடு என்றால் சுமார் மூவாயிரம் சதுரடி பரப்பளவில் நான்குபுறமும் ஓடு வேய்ந்து நடுவில் தொட்டி அமைத்து அதில் விழும் மழைநீரை குழாய் மூலமாக வெளிவாசலில் கொண்டுபோய் விட்டிருப்பார்கள் மற்ற மாவட்டங்களில் என்ன பெயரோ தெரியாது இங்கே தொட்டிக்கட்டு வீடு
தாத்தாவுக்கு ந்ன்கு பரிச்சியமானவர் என்பதால் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு கொள்ளுப்பேத்தி பிற்ந்திருப்பதாகச் சொல்லவும் நேரத்தைக் கேட்டார் சொன்னேன் "ம்..ரோஹிணி நட்சத்திரம் பூமி வாங்குவாள்"என்றார் இவரது நேரமே சரியில்லாமலிருக்கும் போல இருக்கே இவர் என் மகளுக்கு நேரம் பார்த்துச் சொல்கிறாரா?என்று கிண்டலாய் ஒரு பார்வை பார்த்துவிட்டு அருகிலிருந்த ஒரு புத்தகத்தை எடுத்து புரட்டிக் கொண்டிருந்தேன் ராசிக்கட்டம் அம்சம் மற்றும் பல கண்க்குகளைப் போட்டுவிட்டு நிமிர்ந்தார் "உங்க பேத்தீது அருமையான ஜாதகம்ங்க பெரிய பெரிய படிப்பெல்லாம் படிக்கும்ங்க ஆராய்ச்சிக்கெல்லாம் போகுமுங்க"என்றார் "பொட்டப்புள்ளெ போய் எனத்த ஆராய்ச்சி ப்ண்ணுது மேல சொல்லுங்க"என்றார் தாத்தா
ஜோதிடர் கேட்டார் "இந்த மூணுநாள்லெ ஏதாச்சும் பூமி வாங்கியிருக்கிறீங்களா?"
"இல்லீங்களே"இது தாத்தா
"ஏண்டா நீயோ உங்கப்பனோ ஏதாச்சும் பேசினீங்களோ?"என்னைப் பார்த்து தாத்தா கேட்டார்
"இல்லீங்கையா நாங்க ஒண்ணும் பேசலீங்களே"என்று நான் சொன்னேன்
(கொங்குநாட்டு மக்கள் பெரும்பாலும் தாத்தாவை ஐயா என்றுதான் சொல்லுவோம்)
"இந்தப் பொண்ணு பொற்ந்து இத்தனை நாழிகையிலெ பூமி அமைஞ்சிருக்கணும் நீங்க ஊர் போய் பாருங்க நான் இந்த ஜாதகத்தை எழுதி வச்சிருக்கேன்" என்று சொல்லி அனுப்பினார்

நாங்கள் வீடு வந்து சேர்ந்ததும் அப்பா சொன்னார் "பெரியப்பா மகன் வந்திருந்தான் தெக்கால தோட்டத்தெ வித்துப்போடலாம்னு நெனைக்கறேன் நீயே வச்சுக்கண்ணான்னு சொன்னான் சரி வச்சுக்கறேன் வெலயச்சொல்லுன்னு சொன்னேன் உங்கிட்ட நான் எப்பிடி வெலெ சொல்லறது நீயே ஒரு வெலெயப் போட்டு வச்சுக்கன்னு சொல்லிட்டுப் போறான்"

இதைக் கேட்டதும் மலைத்துப் போய் நின்று விட்டேன் இது சாத்தியம்தானா? எப்படி அவ்வள்வு துல்லியமாகச் சொல்ல முடிந்தது? இருபத்தி நான்கு வருடத்திற்க்கு முன்பு செல்போனா இருந்தது? ட்டோய் ட்டொய் என்று பத்து நெம்பரைத் தட்டி என்னோட அப்பாவைக் கூப்பிட்டு "என்ன்ப்பா உங்க மகன் ஜோசியம் பார்க்க வந்திருக்கு என்ன சொல்லி அனுப்பறது"என்று கேட்டுக் கொண்டு சொல்வதற்கு. எல்லாமே கணக்குத்தானே

என்னுடைய ஒன்றுவிட்ட சகோதிரர் ஒருவர் ஜோதிடத்தில் ஆழ்ந்த ஈடுபாடு உள்ளவர் நாங்கள் பார்த்த ஜோதிடரைப் பற்றியும் தெரிந்தவர் அவரிடம் அந்த ஜோதிடரைப் பற்றிக் கேட்டேன் ஜோதிடத்தில் அவர் பெரிய மேதை ஆனால் வாழ்க்கையில் பெரிதாக சாதிக்கமுடியவில்லை என்று சொன்னார் அன்றிலிருந்துதான் நான் ஜோதிடத்தை நம்ப ஆரம்பித்தேன் இப்போது எனது மகள் எம்.எஸ்.சி ஜீன் டெக்னாலஜி முடித்துவிட்டு பி.எச்.டி படிக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறாள் மீண்டும் சந்திப்போம்